Saturday , 24 May 2025

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டுக்கு ஆபத்து காத்திருக்கிறது: சஜித் விடுக்கும் எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, 2028 ஆம் ஆண்டில் இலங்கையின் கடன்களை திருப்பிச் செலுத்தும்போது இலங்கை ஆபத்தை எதிர்நோக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்துரைத்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான முன்னைய அரசாங்கம், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் புள்ளியாகப் பயன்படுத்துவதற்காக, 2033 வரை நீடிப்பு பெறும் சாத்தியம் இருந்தபோதிலும், 2028 ஆம் ஆண்டில் கடன் திருப்பிச் செலுத்தும் செயல்முறையை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டதாக, சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

ஆனால் அது நாட்டிற்கு அல்லது அதன் மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை என்று கூறினார்.

அத்துடன், அது விடயமாக சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதற்காக தற்போதைய நிர்வாகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்தார்.

எனவே,2028 ஆம் ஆண்டுக்குள் கடன் திருப்பிச் செலுத்துதலை ஆரம்பிக்க முடியாவிட்டால், நாடு மற்றொரு மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று சஜித் வலியுறுத்தினார்.

எனவே, கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் போது இலங்கை ஆபத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் அதன் பதவிக்காலம் முடிவதற்குள் தோல்வியடைந்தால், ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொது மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியை ஏற்கப் போவதில்லை என்று வலியுறுத்தினார்.

Check Also

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, …