உள்ளுராட்சி தேர்தலிற்கு முன்பாக அரசியல் இலாபமீட்டுவதற்காக அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கம் தேசிய துன்பியல் நிகழ்வை உணர்ச்சிபூர்வமான பதில்களை தூண்டவும், பொதுமக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் கையாள்கின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு ஏற்ப 2021 பெப்பிரவரி 23ம் திகதி நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற இணையத்தளத்தில் அதனை இப்போதும் பார்வையிடலாம் என தெரிவித்துள்ளார்
இந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் ஏற்கனவே சட்டமா அதிபரிடம் உள்ளன என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
துரதிஸ்டவசமாக தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற தேசிய துயரத்தை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.