வடவள்ளி; தினக்கூலி பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலையில், தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில், 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நான்கு மாதங்களாக அவர்களுக்கு, பல்கலை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை.
அதை கண்டித்து, பாரதியார் பல்கலை பணியாளர்கள் நல சங்கம் சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று பல்கலை வளாகத்தில் நடத்தப்பட்டது. அப்போது, ‘பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல், பதிவாளர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கிறார். பல ஆண்டுகளாக பல்கலைக்காக உழைத்து வருவோருக்கு சம்பளம் வழங்க வேண்டும். பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும்’ என கோஷம் எழுப்பினர்.
பாரதியார் பல்கலை பணியாளர்கள் நல சங்க தலைவர் ரமேஷ் தலைமையில், 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.