ஜனாதிபதித் தேர்தலில் மக்களை ஏமாற்றிய தேசிய மக்கள் சக்தி, தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் மக்களை ஏமாற்றுவதற்குத் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பெலியத்த தேர்தல் தொகுதியில் நடைபெற்ற பிரதேச மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் இன்று வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கும் நடவடிக்கை சீரழிந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் பொய் மற்றும் ஏமாற்று வேலைகளைச் செய்து மக்களை ஏமாற்றியது மட்டுமல்லாது, தற்போது உள்ளூராட்சி தேர்தலிலும் அதனையே முன்னெடுத்து பிரதேச மட்டத்திலுள்ள தமது பொய்யர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி வருகின்றனர்.
எனவே, மூன்றாவது தடவையாகவும் இவர்களிடம் மக்கள் ஏமாறக் கூடாது. வரி, ஊழல், மோசடி, திருட்டு, இலஞ்சம் போன்றவையே எரிபொருள் விலை அதிகரிப்புக்குக் காரணம் என்றனர். இவற்றை நீக்கி எரிபொருள் விலையைக் குறைக்கலாம் என்று மேடைக்கு மேடை முழங்கினர்.
தெளிவான அதிகாரம் கிடைத்தும் இன்னும் இவற்றின் விற்பனை விலை அதிகமாகவே காணப்படுகின்றது.
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
விலைச்சூத்திரத்தை இல்லாதொழிப்போம் என்றனர். அதுவும் நடக்கவில்லை.
இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் மக்களுக்கு அளித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.