உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4 நாட்கள் ஒதுக்கப்பட்டன.
இதற்கமைய கடந்த 24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முதற்கட்டமாக அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அத்துடன், நேற்று (28) மூன்றாவது நாளாக வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இறுதியாக இன்றைய தினம் அஞ்சல்மூல வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அஞ்சல்மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட நான்கு நாட்கள் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் கடந்த மூன்று நாட்களில் வாக்களிக்க தவறிய தகுதிபெற்ற அரச உத்தியோகத்தர்கள் தவறாமல் இன்றைய தினம் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
339 உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மே 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
அதேநேரம், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தமது வதிவிட பகுதியில் உள்ள அஞ்சல் நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, தமக்கான வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, அனைத்து வாக்குச் சீட்டுகளும் அச்சிடும் பணி நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 25,206,533 வாக்குச் சீட்டுகள் முன்னர் அச்சிடப்பட்டதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து 4,597,608 வாக்குச் சீட்டுகள் மீண்டும் அச்சிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.