கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயற்சிக்கும் தி.மு.க – அண்ணாமலை

0
79

அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜ, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த மீஞ்சூர் சலீம்-ஐ பெங்களூரு விமான நிலையம் வரைச் சென்று தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். போதைப் பொருள்கள் விற்பவர்களுக்கும், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், கட்சிப் பதவி கொடுத்து அழகு பார்க்கும் திமுக, சமூக வலைத்தளங்களில் திமுகவை விமர்சிப்பவர்களை மட்டும், வெளிமாநிலங்களுக்குக் கூட, தேடிச் சென்று கைது செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையான தமிழக போலீசார், திமுக ஆட்சியில், சமூக விரோதிகளை எல்லாம் விட்டுவிட்டு, சமூக வலைத்தளங்களின் குரலை முடக்க மட்டுமே பயன்படுத்தப்படுவது, வருத்தத்திற்குரியதும், போலீசாரின் மாண்பை களங்கப்படுத்துவதும் ஆகும். போலீசாரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை, திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.