வாகனப் பாவனை குறித்து மஹிந்தவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!

0
7

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனை மற்றும் பாதுகாப்புக்காக தற்போது ஆறு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, ஆறு வாகனங்களில் நோயாளர் காவு வண்டி உட்பட 3 வாகனங்களை நாளைய தினம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதனை ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு சேவையினால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின்படி, நாட்டின் அரசியல் தலைவர்களில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காட்டப்பட்டுள்ளார்.

இதன் பின்னணியில், இந்த உத்தியோகபூர்வ வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பயன்படுத்தும் மேலதிக வாகனங்களை ஒப்படைக்க வேண்டும் என அவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.

அதில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ 8 வாகனங்களையும், ரணில் விக்ரமசிங்க 11 வாகனங்களையும் பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பிரிவின் இவ்வாறான அறிக்கையை வெளியிட்டுள்ளது.