அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது கூறிய விதத்தில் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோலின் விலையை அதிகரிக்காமல் இருந்தமையை நாம் வரவேற்கின்றோம்.
முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய தற்போது எரிபொருள் விலையை குறைக்க முடியாதென ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது கூறுகின்றது.
எனவே, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை இவ்வாறான கருத்துக்களை மாத்திரம் கூற வேண்டாம் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை குறைக்கப்படும் என தங்களது தரப்பு எதிர்பார்த்திருந்ததாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை.
டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது.
அந்த சலுகை மக்களை சென்றடையவதை நாம் உறுதி செய்வோம். இருப்பினும் 3 ரூபாய் நட்டத்திலேயே பேருந்து கட்டணம் அறவிடப்படுகிறது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 331 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.