அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதிலும், ஜனாதிபதி நிதியத்தை மக்கள் மையப்படுத்திய நிறுவனமாக மாற்றுவதிலும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (11) நடைபெற்ற சரஸவி திரியோ அபிமன் 2026″ வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் “Neurodivergent, Autism, Dyslexia போன்ற விசேட தேவைகளைக் கொண்ட எந்தவொரு பிள்ளையும் கல்வி முறைமையிலிருந்து ஒதுக்கப்படக் கூடாது” என பிரதமர் கூறினார்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வசதிகளைப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமென்றும், இதற்காக டிஜிட்டல் மயமாக்கல், விசேட தேவையுடையோருக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஊடாக உள்ளடக்கிய கல்வியை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பெறுமதிமிக்க மனித வளங்கள் என்றும், ஒவ்வொரு தனிநபரின் மதிப்பையும் அங்கீகரிக்கும் மிகவும் உள்ளடக்கிய மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் பிரதமர் தெரிவித்தார்.
