வடக்கு – தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்குகின்றன – ஜனாதிபதி

தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தாங்கள் இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகளை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், இனவாத அரசியல் ஒருபோதும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

“வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் அரசியல்வாதிகளின் ஒரு கருவியாகவுள்ளது. இனவாதம் என்பது தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மீண்டும் அதிகாரத்தை தமதாக்க பயன்படுத்தும் ஒரு ஆபத்தான கருவியாகும்.

நாட்டில் இனவாத அரசியலுக்கு ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது என்பதை உறுதியளிக்கிறோம். மக்களாகிய நீங்களும் எந்த வகையான இனவாதத்தையும் நிராகரிப்பீர்கள் என நான் நம்புகிறேன்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.