அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பம்! மாகாண சபைத் தேர்தல் நடக்காது!! – ராஜித

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெல்லும்போது தேசிய மக்கள் சக்தி வலுவாக இருந்தது. அதனால்தான் உள்ளூராட்சி சபைகளில் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிரணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர்.

எனினும், இந்த அரசு ஓடாது, நிச்சயம் விழும் என எதிரணி உறுப்பினர்கள் நம்புகின்றனர்.

ஓராண்டு கடந்தும் உள்ளூராட்சி சபைகள் ஊடாக எவ்வித அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால்தான் எதிரணி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் இந்த அரசு நம்பிக்கை இழந்து வருகின்றது.

எனவே, மாகாண சபைத் தேர்தலை இந்த அரசு நடத்தாது. ஏனெனில் ஒரு சபையைக் கூட வெல்ல முடியாத நிலையே இந்த அரசுக்கு உள்ளது.” – என்றார்.