போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஓர் அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களைகே கௌரவிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை வருமாறு:-
“போதைப்பொருள்,குற்றச்செயல்கள் என்பவற்றுடன் பிணைந்த கருப்புப் பொருளாதாரம் எமது நாட்டில் எந்த விதத்திலும் அபிவிருத்தி, அமைதி, சுபீட்சம் என்பவற்றை கொண்டுவராது. இந்தப் பேரழிவிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் பேரழிவு கிராமங்கள்,நகரங்கள், குடும்பக் கட்டமைப்பை எந்தளவு ஆக்கிரமித்துள்ளது என்பதை நாம் அறிவோம்.
குடும்பத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வளர்ந்த பிள்ளை இந்தப் போதைப்பொருளுக்கு அடிமையாகி மோசமான நபராக மாறியிருப்பார். எதிர்பார்ப்புடன் வளர்த்த பிள்ளை சமூகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் செயற்பாட்டாளராக மாறியிருப்பார். இதனை எந்தப் பெற்றோரினால் தாங்க முடியும்?
தாம் பாலூட்டி வளர்த்த பிள்ளைக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுவதை எந்த தாயும் எதிர்பார்க்க மாட்டார். ஆனால் இலட்சக்கணக்கான பிள்ளைகள் இந்த பேரழிவில் சிக்கியுள்ளனர். இது அந்த முழுக் குடும்பத்தையும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது.
இந்தப் பேரழிவினால் கிராமங்கள் பீதியடைந்துள்ளன. இதனால் பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்ப,பகுதி நேர வகுப்புக்கு அனுப்ப, விளையாடுவதற்கு அனுப்ப, சுற்றுலா அனுப்புவதற்குக் கூடப் பெற்றோர் பயப்படுகின்றனர். அதனால்தான் இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க வேண்டும்.
போதைப்பொருளுக்கு அடிமையாகும் பிள்ளை அடுத்து மோசடிகளில் ஈடுபட ஆரம்பிக்கின்றார். திருடராக, மோசடிக்காரராக அவர் மாறுகின்றார். போதைப்பொருள் வலையமைப்புக்கு இறையாகி பணத்துக்காகக் கொலை செய்ய ஆரம்பிக்கின்றார். கைதான 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாக உள்ளனர்.
இது எமது நாட்டின் எதிர்காலத்தை முழுமையாக விழுங்கியுள்ளது. போதைப்பொருள் ஊடாக பெருமளவு பணப்பரிமாற்றம் இடம்பெறுகின்றது. எந்த வர்த்கத்தின் ஊடாகவும் பல நூறு வருடங்களில் ஈட்ட முடியாத பணத்தை ஒரு படகின் ஊடாக ஈட்டுகின்றனர்.
இந்தப் பணம் பல்வேறு கருப்பு வர்த்தகங்களில் ஈடுபடுத்தப்படுகின்றது. அந்தப் பணத்தால் அரச பொறிமுறையில் உள்ள பலவீனமானவர்களை வாங்க முடிகின்றது. சுற்றிவளைப்புகள் மற்றும் தங்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை தடுக்க இவ்வாறு செய்கின்றனர்.
சில பொலிஸ் நிலையங்கள் இதற்கு எதிராகச் செயற்படுவதில்லை எனச் சில கிராமங்களில் குற்றம் சாட்டப்படுகின்றது. நாம் அனைத்து பொலிஸாரையும் அவ்வாறு கூறுவில்லை. சில சமயங்களில் பயமுறுத்தப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகர்களுக்குச் சிறையில் சிறந்த வசதிகளை அளிக்காவிட்டால் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் அச்சுறுத்தப்படுகின்றனர்.
அரச பொறிமுறையை அச்சுறுத்தி தமது பணியை மேற்கொள்ளும் போக்கு ஏற்பட்டுள்ளது. அண்மையில் சில பொலிஸ் அதிகாரிகளுடனான தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியிருந்தன. அந்த உரையாடல்களின் பிரகாரம் பொலிஸார்தான் பாதாள உலகத் தலைவர்கள் என எண்ணத் தோன்றும். பொலிஸ் அதிகாரிதான் அச்சுறுத்தப்படுகின்றார். சீருடையின் கௌரவம் இதனால் பாதுகாக்கப்படுகின்றதா?
இளம் குழுக்களை இணைத்து சட்டவிரோத ஆயுதக் குழுக்கள் உருவாகி போதைப்பொருள் வலையமைப்புடன் கைகோர்த்துள்ளன. இது பொருளாதாரத்துக்குப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக இருப்பிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது வரை நீடித்த பழைய பாதையில் கண்டும் காணாமல் செல்வதா?அல்லது எமக்குள்ள பொறுப்பை நிறைவேற்ற நாம் போராடுவதா? இதில் எதனை தெரிவு செய்யப் போகின்றோம்.
தாய்நாட்டின் மீதான பிணைப்புக்கு அமைய நாம் இதனைத் தோற்கடிப்பதற்கான பாதையை தெரிவு செய்து அதனை அழிப்போம்.
இந்தப் பேரழிவை ஒழிப்பது எமது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அதற்கான ஆரம்ப முன்னெடுப்பாக இந்த வலையமைப்பை உடைக்க வேண்டும். இவர்கள் அரசியல் தலைவர்களின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிகாரம் வழங்கினர். அரசியல்வாதிக்குள்ள அதிகாரம் ஜுலம்பிடியே அமரே போன்றவர்களுக்கு வழங்கப்பட்டன.
சில கட்சிகளின் செயற்குழுக்களில் பாதாள உலகத்தினர் அங்கம் வகித்தனர். சில சமயங்களில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்தனர். சில காலங்களில் இளவரசர்களின் பாதுகாப்புக்காக இருந்தனர். எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்கப்படாத அரசு இன்று உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் எமக்களித்துள்ள மக்கள் ஆணையில் அவர்களின் எதிர்பார்ப்பு பொதிந்துள்ளது. அந்த மக்களின் எதிர்பார்ப்புக்கமைய ‘அகன்று செல்’ எனும் பாரிய முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளோம்.
சிலர் உண்மையான பிரச்சினைகளை ஓரங்கட்டி தாமாக உருவாக்கிய செயற்கையான பிரச்சினைகளைச் சமூகத்திற்குள் கொண்டுவர முயல்கின்றனர். சமூகத்தை திட்டமிட்ட முறையில் ஒரே திசையில் கொண்டு செல்ல முற்படுகையில் குழப்ப நிலையை உருவாக்க வேறு திசைகளுக்கு சமூகத்தின் கவனத்தை திருப்ப முயல்கின்றனர். நாம் அந்தப் பொய்யான குழிகளில் விழ மாட்டோம். சமூகத்தை மீட்கும் இந்தச் செயற்பாட்டை வெற்றி கொள்வோம்.
எமது படையினரும் பொலிஸாரும் பாரிய பங்களிப்பு செய்கின்றனர். உங்கள் சீருடையின் கெளரவம் குற்றவாளிகளின் முன்னிலையில் கரைந்து செல்ல இடமளிக்காதீர்கள். எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் உங்களை பாதுகாக்க நாம் முன்னிற்போம். பாரதூரமான பணியைச் செய்கிறீர்கள். துணிச்சலுடன் உங்கள் பணியைச் செய்யுங்கள். நடுக்கடலில் போதைப்பொருளுடனான படகு கைப்பற்றப்பட்டது. கடற்படை நாடுபூராவும் கடற்பரப்பை பாதுகாத்து பாரிய பங்காற்றுகின்றது. புலனாய்வுப் பிரிவு அதற்கான தகவல்களை வழங்குகிறது. விமானப் படை, இராணுவம் என்பன அதற்கான பங்களிப்பை வழங்குகின்றது.
இந்தப் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் ரீதியிலான உறுதி மற்றும் அதற்குத் தேவையான அரச பொறிமுறை என்பன இதில் முக்கியமாக முன்னெடுக்கப்படுகிறது என நம்புகின்றோம்.
யாருக்காவது இதனை முன்னெடுக்க விருப்பமில்லாவிட்டால் கையை உயர்த்தி சொல்லுங்கள். உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை செய்யுங்கள். போதைப் பொருட்களை விற்பவர், அடிமையானவர், கிராமத்தில் திடீரெனப் பணம் சேர்த்தவர் யார் என பொதுமக்களுக்குத் தெரியும். இவர்கள் மக்களுக்கு மறைவானர்கள் அல்லர். மக்கள் அதனை வெளியில் சொல்லப் பயப்படுகின்றனர். சில இடங்களில் மக்கள் இவர்களுக்குப் பயந்து கிராமங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. குற்ற வலையமைப்புக்கு எதிராக மக்கள் எழுச்சி பெற வேண்டும். இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
போதையற்ற கிராமம், போதையற்ற நகரம், போதையற்ற நாட்டை உருவாக்குவோம். அதற்கு பொதுமக்களின் தலையீடு அவசியம். அடிமையானவர்களை மீட்க வேண்டும். மதத்தலைவர்களுக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது. மத ஸ்தலங்களுக்கும் கிராமத்துக்கும் இடையிலான பிணைப்பை இதற்காக பயன்படுத்த வேண்டும்.
பல தொண்டர் அமைப்புகள் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு தலையிட்டு வருகின்றனர். இதற்காக வரவு – செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சமூக விரோத நபராக போதைக்கு அடிமையானவராக யாரும் பிறப்பதில்லை. எமது பிள்ளைகளை இவ்வாறான பேரழிவுகளுக்கு அடிமையாகாத நாட்டை உருவாக்க நாம் தவறியுள்ளோம். அந்த இளைஞர்களை ஏசுவதில் பயனில்லை.
அத்தோடு பலமான புனர்வாழ்வு செயற்பாடு அவசியம் .சகல மாவட்டங்களையும் உள்வாங்கி புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க இருக்கிறோம். உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள் அவர்களை கவனித்து மீண்டும் முன்பிருந்த நீங்கள் எதிர்பார்த்த பிள்ளையை உங்களிடம் ஒப்படைப்போம். இது தான் இன்றுள்ள பிரதானமான பணியாகும்.
இந்தப் பணியை நாம் நிறைவு செய்யாவிட்டால் பொருளாதாரம், சட்டத்தின் ஆட்சி, சிறந்த சமூகம், கல்வி, சுகாதாரம் உறுதிப்படுத்தப்பட்ட நாடு என்பன பயனற்றதாகவிடும். எனவே அரசாங்கம் என்ற வகையில் இந்தப் பேரழிவை இலங்கையில் இருந்து முற்றுமுழுதாக அழித்தொழிப்போம். ஆனால் இது இன்று கூட்டம் நடத்தி நாளை நிறைவு செய்யக் கூடிய செயற்பாடு அல்ல.
4, 5 தசாப்தங்களாக தொடரும் இந்தப் பேரழிவுக்கு சிக்காத நகரங்களை தேட முடியாதுள்ளது. பலியாகாத குடும்பமொன்றை தேட முடியா நிலை ஏற்பட முன்னர் இந்த பேரழிவுக்கு முடிவு கட்ட வேண்டும்.
முன்னர் போதைப்பொருட்கள் விமான நிலையத்தின் ஊடாக சிறிய பொதிகளாக எடுத்து வரப்பட்டன. இன்று கொள்கலன்களில் வருகின்றன. இவ்வாறு இந்தளவு வளர்ச்சி கண்டது? போதைப்பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதனை ஒழிக்க இடைவிடாது தொடர்ச்சியான செயற்பாடு அவசியம். இதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம். பலரை வெளிநாடுகளில் பிடித்துள்ளோம். இன்னும் பலர் வெளிநாடுகளில் கைதாகியுள்ளனர். இன்னம் சிலர் மறைந்துள்ளனர். அவர்களைப் பிடிக்க வேண்டும். இங்கு இரண்டாவது அடுக்காக இருக்கும் பிரதான விநியோக வலையமைப்பை ஒழிக்க வேண்டும். முழுமையான சுத்திகரிப்பை செய்வோம்.
இந்த செயற்பாட்டில் இருந்து சமூகத்தை திசைதிருப்ப சிலர் முயலலாம். உலகில் அவ்வாறு நடந்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்களை விடுவிக்க சில நாடுகளில் மக்கள் போராட்டம் கூட நடந்துள்ளது. தமது இருப்புக்காகப் பல்வேறு வகைகளில் தமது பணத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் செயற்பாட்டை முடக்க பல்வேறு கோணங்களில் செயற்படலாம். மக்கள் போராட்டங்கள், அரச விரோத செயற்பாடுகளைத் தூண்ட, இல்லாத பிரச்சினைளை ஏற்படுத்த மறுபக்க முன்னெடுப்புகள் இடம்பெறும்.
இதற்கு எதிராகச் செயற்படும் அதிகாரிகளையும் குடும்பத்தினரையும் அச்சுறுத்தப்படுவது எமக்கு வெளியில் தெரியும். அதேபோல் மறைமுகமாக செயற்படும் குழுக்களும் உள்ளன.
அரசின் நோக்கத்தைத் திசைதிருப்பும் சதி நடக்கின்றது. மக்கள் ஆர்ப்பாட்டத்தைப் பணம் கொடுத்து மேற்கொள்ளலாம். இது குற்றவாளிகளுக்கும் அதற்கு எதிரானவர்களுக்குமான போராட்டம் மாத்திரமல்ல. அதனுடன் பிணைந்த பொறிமுறைகள் உள்ளன. இதற்கு எதிரான நாசகார அரசியலை, அரசியலின் ஊடாக நாம் தோற்கடிப்போம். அதற்கு அரச அதிகாரிகள் தலையிடத் தேவையில்லை. அவர்களை நாம் பயன்படுத்த மாட்டோம். ஜனாதிபதியாக இந்தப் பணியை செய்வேன். கட்சித் தலைவராக நாசகார அரசியலைத் தோற்கடிக்கும் பணியைச் செய்வேன்.
தேசிய செயற்பாட்டைத் தடுக்கும் அரசியல் முன்னெடுப்புக்கு எதிரான அரசியல் செயற்பாட்டை நாம் வேறாக மேற்கொள்வோம்.
போதைப் பொருட்களைப் பயன்படுத்தி ஆட்டம் போடும் குண்டர்களுக்குத் தொழில் ரீதியான படையினர் அடிபணிய முடியுமா? அவர்களுக்கு உயிர் மீதான ஆசை கிடையாது. அவர்களில் ஒரே ஆயுதம் அதுதான். அதில்தான் அவர்கள் எம்மை விட முன்னிலையில் இருக்கிறார்கள்.
அனைவரும் ஒன்றுபட்டால் இதனைத் துடைத்தெறிவோம். எமது செயற்பாடுகளை நாளுக்கு நாள் வேகப்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். பழைய ஆவணங்களை ஓரமாக வையுங்கள்.அது பழைய கதை. கடந்த காலத்தை கொண்டு அன்றி நிகழ்காலத்தை வைத்தே உங்களை அளவிடுவோம்.
அரசியல் அதிகாரம் மாறியுள்ளது. தேசிய பேரழிவில் இருந்து தேசத்தை மீட்பதற்கான செயற்பாட்டை கைவிடாமல் முன்னெடுப்போம். அதற்கான ஒன்றுபட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.
மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, சதருவன் மதரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.





