புத்தாண்டில் ஜனாதிபதி செய்த ‘புதுமை’!

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த நிலையில், அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றார்.

அநுராதபுரம் – கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராமத்தில் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய வீட்டிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது.

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

மேலும், இப்பிரதேச செயலாளர் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

பிரதேச மக்களுடன் இணைந்து புதிய இல்லத்தில் புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த மக்கள் அனைவருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதேபோன்று, ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்த அப்பகுதி மக்கள், ஜனாதிபதிக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.